தகவல்தொடர்பு – பன்மொழியின் பயன்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
பல மொழிகள் தெரிந்துவைத்திருத்தல் உயிரையும் காக்கும் என்பதனை மணிமேகலை காப்பியத்தில் வருகிற ஒரு கிளைக்கதை உணர்த்துகிறது. உரையாடலில் Logic and Sequencing என்கிற கோர்வையாகவும் தர்க்க வாதச் சான்றுகளுடன் பேசுவது கொடியவர் மனத்தையும் மாற்றவல்லது என்பதனையும் இக்கதை காட்டுகிறது.
மணிமேகலை காப்பியத்தில் ஆதிரை என்னும் பெண்ணின் நல்லாளின் கணவன் சாதுவன் என்னும் வணிகன் ஆவான். அவன் ஆதிரையை விட்டுவிட்டு ஒரு கணிகையுடன் சேர்ந்து வட்டாடல், சூதாடல் இவைகளில் பொருள் எல்லாவற்றையும் இழக்கிறான். கணிகையும் அவனை விரட்டி விடுகிறாள். பிறகு சாதுவன் வணிகம் காரணமாகக் கடலில் செல்லும் மக்களோடு தானும் போகிறான்.
கடற்காற்றின் சீற்றத்தால் அவன் சென்ற கலம் சிதைகிறது. முறிந்த பலகை ஒன்றைப் பற்றிக்கொண்டு சாதுவன் அலைகளில் மிதக்கிறான். நக்க சாரணர்களாகிய நாகர்கள் வாழுகின்ற மலைப் பக்கம் போய்ச் சேர்கிறான். சாதுவன் கடலில் பட்ட துன்பத்தால் வருந்தித் துயிலில் ஆழ்ந்து விடுகிறான் நாகர்கள் அவனைக் காண்கிறார்கள். அவன் ஊனைத் தின்னலாம் என்று நினைத்து “ஊன் உடை இவ்வுடம்பு உணவு” என்று அவனை எழுப்புகிறார்கள்.
சாதுவனுக்கு அவர்களுடைய மொழி விளங்குகிறது. “அவர் பாடை மயக்கு அறு மரபின்” கற்றனன் ஆதலின் அவர்களுடன் அவர்கள் மொழியில் உரையாடுகிறான். அவர்கள் அவனைத் தங்கள் குரு மகனிடம் கூட்டிச் செல்லுகிறார்கள்.
அங்கே கள் நிறைந்த பானை, புலால் நாற்றம், காய்ந்து கொண்டிருக்கும் வெள்ளை எலும்புகள் இவை பரவிய ஓர் இருக்கையில் நாகர்களின் தலைவன் தன் பெண்டுடன் இருக்கும் காட்சி ஓர் ஆண் கரடி தன் பெண் கரடியோடு இருப்பதைப் போன்று (எண்கு தன் பிணவோடு இருந்ததுபோல) தோன்றுகிறது.
அவனையும் தன் பேச்சினால் சாதுவன் பிணித்துவிடுகிறான்! பிறகு மரநிழலில் இளப்பாறியதும், அவனுக்கு ஓர் இளைய நங்கையையும் வெங்கள்ளையும் ஊனையும் கொடுக்குமாறு நாகர் தலைவன் தன் மக்களிடம் சொல்கிறான். அது வேண்டாம் என்று சாதுவன் மறுக்கிறான். நாகர் தலைவனோ, ”பெண்டிரும் உண்டியும் இல்லாவிட்டால் இந்த உலகத்தில் மக்களுக்கு வேறு என்ன பயன் உண்டு? உண்டானால் எங்களுக்குக் காட்டு” என்று கேட்கிறான்.
சாதுவன் மறுமொழியாக நல்லறம் என்றால் என்ன என்று எடுத்துச் சொல்கிறான்.
”மயக்கும் கள்ளும் மன்னுயிர் கோறலும்
கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய்!
பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்
உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின்
நல்லறம் செய்வோர் நல்லுலகு அடைதலும்
அல்லறம் செய்வோர் அருநரகு அடைதலும்
உண்டு” என உணர்த்துகிறான்.
சாதுவனின் ”நல்லறம்” பற்றிய பேச்சு நாகர் தலைவனுக்குப் பெரும் சிரிப்பைத் தருகிறது. எனவே அவன் சாதுவனிடம் கேட்கிறான்: ”உடம்பை விட்டு ஓடிப் போகும் உயிர் இன்னோர் உருவம் கொண்டு இன்னோர் உடம்பில் புகும் என்று சொன்னாய். அந்த உயிர் எப்படிப் போய்ப் புகும் என்று சொல்லு” சாதுவன் மறுமொழியாகக் கூறுகிறான்,
”உயிரோடு வாழும்போது உடலுக்கு உணர்வு இருக்கிறது. ஆனால் உயிர் போனவுடன், அந்த உடம்பை வெட்டி, எரித்தாலும் அந்த உடலுக்கு உணர்ச்சியில்லை. அதனாலேயே அந்த உடம்பை விட்டு வெளியேறியது ஒன்று உண்டு என்று தெரிந்துகொள். உடம்பை இங்கேயே வைத்துவிட்டு உயிர் பல காவதம் செல்வதைக் கனவு காணும்போதுகூடத் தெரிந்துகொள்ளலாமே! அப்படித்தான், உடம்பை விட்டுப் போன உயிரும் தான் செய்த வினைக்கு ஏற்றபடி அமைந்த ஓர் உடம்பில் புகுகிறது. இதை நீ தெளிவாகத் தெரிந்துகொள்.”
இப்படிச் சாதுவன் சொன்னதைக் கேட்ட நாகர் தலைவன் ”நல்லது அறிந்த அந்தச் செட்டி”யின் கால்களில் விழுந்து கேட்கிறான்: ”கள்ளையும் ஊனையும் தவிர்த்தால், இந்த உடம்பில் உள்ள உயிரைப் பாதுகாப்பது எப்படி என்று தெரியவில்லை. இறக்கும் வரை எங்களுக்கு ஏற்ற நல்லறத்தை எடுத்துச் சொல்லவேண்டும்” சாதுவன் அவர்களுக்கு ”முதுமை அடைந்து இறந்து போகும் விலங்குகளை” உண்ணுமாறு கூறி நல்ல வழியில் வாழ்வது எப்படி என்று சொல்கிறான்.
நாகர் தலைவன் நன்றி காட்டுகிறான். அவன் கொடுத்த பொருள்களைச் சாதுவன் எடுத்துக்கொண்டு சந்திரதத்தன் என்னும் வாணிகனின் வங்கம் வந்தபோது அதில் ஏறித் தன் ஊர் வந்து சேருகிறான். இவ்வாறாகப் பல மொழிகள் கற்றுப் பிறர் மனங்கொள்ளுமாறு உரையாடுகிற திறனை வளர்த்துக் கொள்கிறபோது இன்னல் விலகி வாழ்வு சிறக்கிறது.
இராமாயணம், மகாபாரதமட்டுமல்லாது நம் நாட்டில் எழுந்த பிற மரபுக் காப்பியங்களிலும், இலக்கியங்களிலும் பல்வேறு கிளைக்கதைகள், எடுத்துக்காட்டுகள், செய்திகள் நம்மை வழிநடத்தும் கருவூலங்களாகத் திகழ்கின்றன.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக