திங்கள், 17 மே, 2021

மணிமேகலை - தன்னம்பிக்கை உரை!

 https://m.facebook.com/story.php?story_fbid=4234262143274493&id=100000722463448

https://m.facebook.com/story.php?story_fbid=4058368310853310&id=100000405432359 


இன்று (3.4.2021) மாலை Readforte தளத்தில் நான் "மணிமேகலையில் தன்னம்பிக்கைச் சிந்தனைகள்" என்ற தலைப்பில் ஆற்றிய உரை வெறொரு தொலைபேசி மூலம் பதிவுசெய்யப்பட்டது. உரையை 90% பதிவுசெய்ய முடிந்தது. அந்த ரிக்கார்டிங் உடைய தொடர்பு லிங் நண்பர்களின் கனிவான கருத்துக்கு அளித்துள்ளேன்.


மணிமேகலை உணர்த்தும் தன்னம்பிக்கை

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

இலக்கியங்களின் உயர்ந்த நோக்கங்களுள் ஒன்று படிப்போருக்குத் தன்னம்பிக்கையை ஏற்படுத்துதல் ஆகும். மணிமேகலை காப்பியத்தில் இடம்பெறும் தன்னம்பிக்கைச் சிந்தனைகளை பின்வரும் நிலையில் அடுக்கிக் காண இயலும்.


1. கோவலன் தன் செல்லப் பெண்ணுக்குப் பெயர் வைக்கிறபோது எண்ணிப்பார்த்து ‘மணிமேகலை’ என்ற நன்னெறித் தெய்வத்தின் பெயரை இடுகிறான். அப்பெயர் அவளுடைய நல்ல எண்ணங்களுக்கு வலுவூட்டுகின்றது. இன்று பிள்ளைக்குப் பெயர் வைப்பவர்கள் உணர வேண்டிய செய்தி இது.


2.பிள்ளைகளுக்குப் பெற்றோர் நடந்துகாட்டி வழிகாட்ட வேண்டும். தங்கள் குடும்ப அங்கத்தினரின், மரபினரின் நற்செயல்களைத் தாய் எடுத்துச்சொல்லி வளர்க்கிறபோது முன்னோர் உயர்ந்த நெறிகள் அவர்கள் மனதில் படியும். 


சித்ராபதி வழி வந்த ஆடல் மகளிர் வாழ்க்கை, கோவலன் கண்ணகி வழியாக வருகிற வாழ்க்கை என்று இரண்டு மரபுகள் மாதவி முன் தெரிந்தெடுக்க உள்ளன. ஆனால் மாதவி துறவறம் துவராடை அணிந்து மணிமேகலைக்கு வழக்கு காட்டியாக முன்நிற்கிறாள்.


 “காவலன் பேரூர் கனைஎரி ஊட்டிய மாபெரும் பத்தினி மகள் மணிமேகலை அருந் தவப்படுத்தல் அல்லது யாவதும்

திருந்தாச் செய்கைத் தீத்தொழில் படாஅள்” 


என்று சொல்லி மணிமேகலை நெஞ்சத்தில் தான் கண்ணகி மகள்; தீத்தொழிலுக்கு உரியவளன்று என்ற நெறியை வளர்தெடுக்கிறாள்.


3. நல்ல அறங்களுக்கு முயல்பவர்களுக்கு மக்கள், பெரியோர், சூழ்நிலை, தெய்வம் அனைத்தும் துணையாகும் என்பதைக் காப்பியம் உணர்த்துகிறது. மணிமேகலைக்கு சுதமதி, காயசண்டிகை, ஆதிரை, அறவண அடிகள் அனைவரும் உதவுகின்றனர்.  ”தெய்வம் மடிதற்றுத் தான்முந்துறும்” என்பதற்கிணங்க மணிமேகலா தெய்வம் அவளை மணிபல்லவத் தீவுக்குக் கொண்டு சேர்க்கிறது. வரங்கள் நல்கிறது. 


தீவில் தீவதிலகை என்னும் தெய்வம் மணிமேகலை கைகளுக்கு அமுதசுரபி வர துணை நிற்கிறது. பெரியாரைத் துணைக்கொள்வதில் மணிமேகலை சிறந்து விளங்குகிறாள்.


4. நல்லெண்ணத்தின் வலிமையால் வந்த துன்பம் நீங்கும். உதயகுமரன் கொலையால் மணிமேகலை சிறைபுகுகிறாள். சிறையில் இராசமாதேவி காவலர்மூலம் பல கொடுமைகள் செய்கிறாள். அவற்றை மணிமேகலை பொறுத்துக் கொண்ட திறத்தைக் கண்டு இராசமாதேவி மனம் மாறி அவளைத் தொழுகிறாள். பெரியோரைப் போற்றும் தவச்செல்வி அதனைத் தடுத்துத் தான்தொழுகிறாள். 


5.தகவல் தொடர்பு கலை சாதுவன் கதை மூலம் தெற்றென விளக்கப்படுகிறது. நாகர்மொழி அறிந்திருந்தமை அவன் உயிரினைக் காக்குகிறது. சாதுவன் நரமாமிசம் உண்பவர்களிடமும் அவர்கள் மனம்கொள்ளுமாறு சான்றுகளுடன் அறிவைக் கெடுக்கும் கள்ளுண்ணுதல், மனிதனால் படைக்கவியலாத உயிரைக் கொல்லுதல் போன்றவற்றைத் தவறெனத் தன் நாகர் மொழித்திறன் மூலம் உணர்த்தித் திருத்துகிறான். ஒருவனுடைய முன்னேற்றத்திற்குக் காரணமான அறிவை மயக்கும் கள் தன்முன்னேற்றம் வேண்டுபவர் விலக்க வேண்டியதில் தலையாயது என்பது வலியுறுத்தப்படுகிறது..


6. “பொறியின்மை யார்க்கும் பழியன்று

ஆள்வினை யின்மை பழி” என்பது பொய்யாமொழி. விதியெவ்வாறு இருந்தாலும் தவத்தாலும் பசிப்பிணி அகற்றும் அறத்தாலும் தொடர்ந்து செயலாற்றி மானுடம் போற்ற வாழ்க்கை நடத்தலாமென்பதற்கு எடுத்துக்காட்டாகிறாள் மணிமேகலை.


7. ஆப்பிரகாம் மாஸ்லா தன்னுடைய உளவியல் கோட்பாட்டில் அடிப்படைத் தேவையான உண்டி முதல் உயர்ந்த பட்சத் தேவையான இலக்கு நிறைவேறல், தன்னிலை அறிதல் வரை தேவைகள் நிறைவேறுகிற போது மனிதன் தன்னூக்கம் கொள்கிறான் என்கிறார். பசிப்பிணி அறுக்கும் அடிப்படைத் தேவையைப் போக்குகிற பணியில் தொடங்குகிற மணிமேகலையின் வாழ்க்கை “தவத்திறம் பூண்டு தருமம் கேட்டு நோன்பு நோற்றுப் உன்னதம் அடைகிற” உச்சபட்சத்தில் நிறைவடைகிறது.


ஒரு தனி மனிதப் பெண்ணாக இருந்து மணிமேகலை சாதித்த சாதனைகள், மற்றும் அவள் சிக்கல்களை எதிர்கொண்ட விதம் ஆகியன குறிப்பாகப் படிக்கும் அனைவருக்கும் தன்னம்பிக்கை ஊட்டுவன.


வாழ்த்துக்களுடன்.

சொ.வினைதீர்த்தான.

கருத்துகள் இல்லை: