அகப் பகை!
>>>>>>>>>
"காண்தகு மென்றோள் கணிகை வாயின் சொல்லுந் தூண்டிலின் உட்பொதிந்த தேரையும்- மாண்டசீர்க் காழ்த்த பகைவர் வணக்கமும் இம்மூன்றும் ஆழ்ச்சிப் படுக்கும் அளறு."
என்ற திரிகடுகம் பாடல் எண் 42ஐ கண்ணுற்றேன்.
விளக்கம்:
1.விலை மாதர்களின் இனிய சொற்கள். 2.மீன்களைப் பிடிக்க தூண்டில் முள்ளில் வைக்கப்பட்ட தவளை. 3.பகைவர்கள் காட்டும் போலி வணக்கம். இவை மூன்றும் கேடு விளைவிக்கும். (அளறு - நரகம்)
பொருள் பெண்டிரின் பொய்மைப் புன்னகை, ஒன்று எய்தி நூறு இழக்கும் சூதின் கவர்ச்சி, கள்மயக்கம் இவையெல்லாம் பிறிதொன்று தருகிற பொய் வரவேற்பு!
ஆனால் நம்முடைய அகத்தில் எழுகின்ற பகை குறித்துத் திருக்குறள் கூறுவது என்னவென்று தேடிப்பார்த்தேன்.
அழுக்காறு என்னும் பொறாமை, பேராசை, சினம், இன்னாச் சொல் இவைகள் நான்கும் ஒருவனுக்கு இழுக்கைத் தரவல்ல பகை என்கிறது திருக்குறள்.
கல்லாமை, பொறுமை இன்மை, ஆள்வினையின்மை, உலகத்தோடு ஒட்ட ஒழுகாமை, மடி, மறதி இவையும் ஒருவனுக்குப் பகையே!
புறப்பகை அறிந்ததே!
புறப்பகையின் போலி வணக்கம் வெளிப்படை. ஆனல் அகப்பகை?
மண்பாண்டத்தை உடைக்கும் கருவி போல (குறள் 883) ஒன்றும் உரு இல்லாது ஒருவனை இவை அழிக்கின்றன.
"பகைஎன்னும் பண்பிலதனை ஒருவன் நகையேயும் வேண்டற்பாற்று அன்று (871)
விளையாட்டாகக் கூடக் கைக்கொள்ளக் கூடாதாம்.
"வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு (882)
புறப்பகையை எதிர்கொண்டு வென்றுவிடலாமாம்! ஆனால் நம் அகத்தில் தோன்றுகிற பகை உணர்வை என்ன செய்வது?சிந்தை முழுவதும் நற்சிந்தனை, நற்செயல்களால் நிரப்பினால் நம்மிடம் உள்ள அகப்பகை ஒழிவது உறுதி!
வாழ்த்துகள்!
சொ.வினைதீர்த்தான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக