திங்கள், 17 மே, 2021

மணிமேகலை - Maslow - தேவைக்கோட்பாடு!

மணிமேகலை காப்பியமும் தேவைக்கோட்பாடும்

>>>>>>>>>>>>>>>>>>>>

திருவாடானை அரசினர் கலைக்கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் ‘மணிமேகலை காப்பியத்தில் தன்னம்பிக்கை’ என்ற தலைப்பில் உரையாற்ற பேரா மு.பழநியப்பன் அவர்களால் வாய்ப்பமைந்தது. அதற்காக மணிமேகலை காப்பியத்தை முழுவதும் படித்தேன். மணிமேகலை வாழ்க்கையோடு ஆப்பிரகாம் மாஸ்லாவின் ‘தேவைக்கோட்பாடு’ கட்டமைப்பு பொருந்திப்போவதைக் கண்டேன். 

மாஸ்லா கூறும் தேவைகள்: 1.அடிப்படைத் தேவைகள் (Basic needs), 2.பாதுகாப்புத் தேவை (Security Need) 3.Companionship Need 4.Esteem Need 5.Self Actualization. ஒரு தேவை பூர்த்தியானதும் அடுத்த தேவைக்கு மனிதன் ஏங்குகிறான்; அடைய முயல்கிறான் என்பது அவருடைய உளவியல் கொள்கை.


இந்த அடிநிலைத் தேவைக்கட்டமைப்புச் சிந்தனைகளை மணிமேகலை வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். முதல் அடிப்படைத்தேவையான (Basic Need) பசிப்பிணியைத் தீர்க்க வேண்டும் என்ற மணிமேகலையின் எண்ணத்தின் வலுவானது அவள் கைகளில் அமுதசுரபியை மணிமேகலா தெய்வம், தீவதிலகை வழியாகக் கொண்டுவந்து சேர்க்கிறது.


தீவதிலகை மணிமேகலைக்குப் பசிப்பிணியின் கொடுமையைச் சொல்லி, நாட்டில் மழை வளம் இல்லாமல் விசுவாமித்திரனாகிய அரசன் கூட நாயின் புலாலைத் தின்ன நேர்ந்த நிலை வந்ததையும் சொல்லி, உலகில் எப்படிப்பட்டவர்களுக்கு உணவு அளிக்கவேண்டும் என்றும் அறிவுறுத்துகிறாள்.


”ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்

ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்

மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை;

மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே”


உலகத்தில் வாழ்பவருக்கு உணவு கொடுத்தவர்கள் உயிர் கொடுத்தவர்களே.இவ்வாறு மனிதவாழ்வின் முதல் தேவையான பசிப்பிணியறுத்தல் குறித்துக் காப்பியம் பேசுகிறது.


மாதவி மணிமேகலைக்கு காட்டுகிற துறவறநெறி ஆடல் மகளிர் வாழ்க்கையை மணிமேகலை தவிர்க்க உதவும் பாதுகாப்பு (Security Need) அரணாகிறது.


அடுத்த தேவையான தோழமை (Companionship Need) குறித்துப் பார்க்கலாம். மணிமேகலையின் மீது காதல் கொண்டிருந்த அந்நாட்டு இளவரசன் உதயகுமரன் அவளைத்தேடி உவவனத்திற்கு வருகிறான். அவனிடமிருந்து தப்பித்துக் கொள்ள எண்ணிய மணிமேகலை அங்கிருந்த பளிங்கினால் அமைக்கப்பட்ட பளிக்கறை மண்டபத்தில் புகுந்துவிடுகிறாள். உதயகுமரன் பளிக்கறைக்குள்ளே செல்ல வழி தெரியாமையால் மணிமேகலையைப் பலவாறு இழித்துக் கூறிவிட்டுத் திரும்பிச் சென்றுவிடுகிறான். உதயகுமரன் சென்றபின் மணிமேகலை வெளியே வருகிறாள். சுதமதியிடம் தன் நெஞ்சமும் உதயகுமரனை நாடுவதை எடுத்து உரைக்கிறாள்.


"புதுவோன் பின்றைப் போனது என் நெஞ்சம்

இதுவோ அன்னாய் காமத்து இயற்கை 

இதுவே ஆயின் கெடுக தன் திறம்... "


என்று. அவ்வெண்ணெத்தை மாற்றவேண்டும் என்ற உறுதியும் கொள்கிறாள். 


அவள் கைகளில் அமுதசுரபி கிடைக்கிறது. “காணார், கேளார், கால்முடமானோர், பசிநோய் நோற்றார், பல்நூறு ஆயிரம் விலங்கின் தொகுதி” என்று அருந்தியோர்க்கெல்லாம் ஆர் உயிர் மருந்தாய் பெருவளம் அமுதசுரபி வழியாக சுரந்து நல்குகிறாள் மணிமேகலை. ”பசிப்பிணி தீர்த்த பாவை”யாக யாவரும் போற்றுகிறார்கள். (ESTEEM NEED)


போற்றிய பின்னரும், யாவரும் அங்கீகரித்துக் கொண்டாடிய பின்னரும் மணிமேகலையின் தேவையடங்கவில்லை. அவள் எண்ணம் பூர்த்தியாகவில்லை. 


அவள் தேவை உச்சபட்சத்தேவையான தன்னை அறிதல், தன் நோக்கம் அறிதல், அதனை அடைதல் (Self Actualization) என்பதிலேயே நிலை கொண்டிருக்கிறது அறவண அடிகளிடம் ”அடிகள் மெய்ப்பொருள் அருளுக” எனத் தருமம் கேட்கிறாள். புத்த சங்கத்தில் சரண் புகுகிறாள். இறுதியில் மனத்து இருள் நீங்க நோன்பு நோற்கிறாள். 


பசிப்பிணி அறுக்கும் அடிப்படைத் தேவையைப் போக்குகிற பணியில் தொடங்குகிற மணிமேகலையின் வாழ்க்கை “தவத்திறம்பூண்டு தருமம் கேட்டு நோன்பு நோற்று உன்னதம் அடைகிற” உச்சபட்சத்தில் நிறைவடைகிறது.

அன்புடன்

சொ.வினைதீர்த்தான்.

1 கருத்து:

Unknown சொன்னது…

நாங்களும் கொஞ்சம் தெரிந்து கொண்டோம்.நன்றி