செவ்வாய், 18 மே, 2021

The Art of saying "No" - புறம் 196

 The Art of saying "No"

..................................

Art of saying "No"

இயன்றதும் இயலாததும்!

..........................................

புறநானூற்றுப் புலவன் ஆவூர் மூலங்கிழார் இன்றைக்கு நிர்வாகவியல், வாழ்வியல் நெறி பேசுகிறவர்கள் எல்லாம் உரைக்க முயலுகிற உயர் "ஆளுமை" பண்பைப் புறநானூறு பாடல் எண் 196ல் தெளிவாக உரைக்கிறார்.

பாண்டியன் நன்மாறனைப் புலவர் பரிசில் வேண்டிப் புகழ்ந்துரைக்கிறார். கேட்டிருந்த பாண்டியன் புலவருக்குப் பரிசு நல்காமல் ஏனோ காலம் கடத்துகிறான். புலவர் மூலங்கிழார் சினம் அடைகிறார். "ஆள்வினைப் பண்பை" எடுத்து ஓதுகிறார்.

"ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவர்க்கும்ஒல்லாது இல்லென மறுத்தலும் இரண்டும் ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே;"

அதாவது ஒரு விடயம் முடியுமென்றால் முடியும் என்று உடன் செய்லாற்றலும் இயலாதென்றால் "முடியாது" என்று உடன் கூறிவிடுதலுமே "ஆள்வினைப் பண்பின்" வெளிப்பாடு!

முடிவெடுக்காமல் காலம் தாழ்த்துவது கேட்டவனுக்கு வருத்தம் தருவது மட்டுமல்லாது முடிவெடுக்காது காலந் தாழ்த்தியவனுக்கும் கேடு விளைவிக்கும்.

"ஒல்லாது ஒல்லும் என்றலும் ஒல்லுவது இல்லென மறுத்தலும் இரண்டும் வல்லேஇரப்போர் வாட்டல் அன்றியும் புரப்போர் புகழ்குறை படூஉம் வாயில்"

முடியாததை முடிப்பேன் என்றலும், முடிந்ததை முடித்துக்கொடுக்காததும் ஒருவனுடைய புகழுக்கு இழுக்கு! அவனுடைய ஆளுமையின் குற்றம்.

அன்று இந்தக் குற்றம் எங்கும் எவரிடத்தும் இருந்ததில்லை என்பதைப் புலவர் கீழ்வருமாறு பதிவு செய்கிறார்.

"அனைத்தா கியர்  எனைத்தும்சேய்த்துக் காணாது கண்டனம்"

எந்த அரசரிடமும் இல்லாத ஆளுமைக் குற்றம் உன்னிடம் இருப்பதைக் காண்கிறேன். அது உன்னையும், உன் பிள்ளைகளையும், உன்னுடைய அரசாங்கத்தையும் பாதிக்கும். என்வே உன்னுடைய மக்கள் நன்றாக இருக்க, உன் எஞ்சிய நாட்கள் சிறப்பாக அமையப் பாண்டியனே உடனே "முடிவெடுத்து"  "இயன்றதற்கு"  உடன்பட்டு செயலாற்றி அப்பொழுதே நிறைவேற்று! இயலாதாயின் "இயலாது" என்பதினைக் கூறி உடனே மறுத்துவிடு. குலம் அழிக்கும் ஆள்வினைக் குறையான "நாநயக் குறையை" மாற்றிக்கொள்.

"அதனான் நோயிலர் ஆகநின் புதல்வர்; யானும்வெயிலென முனியேன்; பனியென மடியேன்; கல்குயின் றன்ன என் நல்கூர் வளி மறை "நாணலது" இல்லா கற்பின் வாள்நுதல் மெல்லியல் குறுமகள் உள்ளிச் செல்வல்; சிறக்க நின்நாளே!"

பாடலில் புலவனின் பெருமிதம் நிறைவுப் பகுதியில் பதிவு செய்யப்படுகிறது. புலவன் கூறுகிறான்  "அரசனே நீ பரிசில் தராததால் நான் ஒன்றும் வெயிலிலும் பனியிலும் மடிந்துவிட மாட்டேன். எனக்கு வறுமை புதிதில்லை. வீசுகின்ற காற்றைத் தடுக்க வல்ல ஆனால் சரியான கூரையில்லாத என் வீட்டில் மங்கல நாண் அல்லது வேறு அணி அணிந்திராத என் மனைவியிடம் நான் செல்கிறேன். "நிறை காக்கும் காப்பு" என்னும் உள்ளதைக் கொண்டு நிறைவு காணும் அவள் குணம் எங்களைக் காக்கும்" 

புறநானுறு பாடல் 196.

ஆவூர் மூலங்கிழார் பாண்டியன் நன்மாறனைப் பாடியது.

"ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவர்க்கும்ஒல்லாது இல்லென மறுத்தலும் இரண்டும் ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே;

ஒல்லாது ஒல்லும் என்றலும் ஒல்லுவது இல்லென மறுத்தலும் இரண்டும் வல்லேஇரப்போர் வாட்டல் அன்றியும் புரப்போர் புகழ்குறை படூஉம் வாயில்;

அனைத்தா கியர்இனி இதுவே எனைத்தும் சேய்த்துக் காணாது கண்டனம் அதனான்

நோயிலர் ஆகநின் புதல்வர்; யானும் வெயிலென முனியேன்; பனியென மடியேன்; கல்குயின் றன்ன என் நல்கூர் வளிமறை நாணலது இல்லாக் கற்பின் வாள்நுதல் மெல்லியல் குறுமகள் உள்ளிச் செல்வல்; சிறக்க நின்நாளே"

"இயன்றது என்றால் அந்த நொடியே செய்க; இல்லென்றால் உடனே இதமாக மறுத்துவிடுக!" 

வாழ்த்துகள்!சொ.வினைதீர்த்தான்



7 கருத்துகள்:

Murli+ சொன்னது…

மிகவும் அருமையாக உள்ளது. இல்லை என்று சொல்வது அவ்வளவு சுலபம் இல்லை. திறம்பட விவரித்திருக்கிறீர்கள். வாழ்த்துகள் 

Annamalai சொன்னது…

Importance of taking quick decisions is well described

thiruvarul சொன்னது…

புறநானூற்றுக் கருவூலத்தில் தங்களின் துறை சார்ந்த தங்களுக்கு பிரியமான செய்திகள் உள்ள பாடலைத் தெரிவு செய்து அதில் உள்ள வரிகளோடு தங்கள் கருத்துக்களையும் குறிப்பாக ஆளுமைப்பண்பு எனப்படும் தங்கள் துறை சார்ந்த கருத்துக்களையும் பொருத்தி விளக்கியிருப்பது மிகவும் போற்றுதலுக்கு உரியது அருமையானது படிப்பவருக்கு புதிய ஒரு பொருளை தருகிறது மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா

s.vinaitheerthan சொன்னது…

இந்த தளத்தினைப் பார்த்து உள்வாங்கி அன்புடன் கருத்து நல்கியதற்கு மிக்க நன்றி நண்பர் திரு முரளி! பிற பதிவுகளுக்கும் நேரம் கிடைக்கும்போது மேலான கருத்துக் கூறக் கேட்டுக்கொள்கிறேன்

s.vinaitheerthan சொன்னது…

Thanks a lot for your kind comment!

s.vinaitheerthan சொன்னது…

முழுமையாகப் பதிவினை உள்வாங்கி நுணுக்கமாக அணுகிச் சிறப்பான கருத்துரைத்துள்ளதற்கு மிக்க நன்றி நண்பர்.

s.vinaitheerthan சொன்னது…

இந்த தளத்தினைப் பார்த்து உள்வாங்கி அன்புடன் கருத்து நல்கியதற்கு மிக்க நன்றி நண்பர் திரு முரளி! பிற பதிவுகளுக்கும் நேரம் கிடைக்கும்போது மேலான கருத்துக் கூறக் கேட்டுக்கொள்கிறேன்